தமிழர் திருநாள் 2020

By / 19. March 2024 / Allgemein / No Comments
தமிழர் திருநாள் 2020

“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை”  

எனும் குறட்பாவிற்கிணங்க தொழில்களுக்கெல்லாம் முதற்கரணியமாய் விளங்கும் உழவுத்தொழிலுக்கு உறுதுணையாயும், உலகில் வாழ் உயிரிகளின் உயிரூட்டத்திற்கும் கரணியமாகவும் விளங்கும் கதிரவனுக்கு நன்றி பாராட்டி, முற்றத்தில் பொங்கலிட்டு, தலைவாழை இலை விரித்து, பொங்கல் படைத்துப் போற்றப்படும் திருநாள் தைத்திருநாள் ஆகும். இதுவே தமிழர் புத்தாண்டுமாகும்.

நெல்மணிகள் விளைந்து, முக்கனிகளும் முற்றி ,எங்கும் பசுமையாக விளங்கும் தைத்திங்கள் முதல் நாளில் தைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில், எமது தமிழாலயத்தால் ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட்டு வரும், இப்பொங்கல் விழா 27 வது தடவையாக 17 யனவரி 2020 வெள்ளிக்கிழமை அன்று Gemeinschaftshaus Lichtenrade மண்டபத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

அன்று மாலை 6.30 மணியளவில், எமது தமிழாலயத்தின் ஆசிரியர்கள் திருமதி கலாறஞ்சினி தனபாலசிங்கம், திருமதி கதிஷ்யா செந்தூரன் அவர்களால் மங்கல விளக்கேற்றி, விழா ஆரம்பித்துடன் அகவணக்கம், தமிழாலய கீத்த்தைத் தொடர்ந்து, தமிழாலய பொருளாளர், ஆசிரியை செல்வி சகிதா நித்தியானந்தன் அவர்களின் வரவேற்புரை இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து தமிழாலய மாணவர்களின் பொங்கல் நிகழ்ச்சிகள் ஆற்றப்பட்டது. அந்த வகையில்  சிறுவர் நடனத்துடன் ஆரம்பித்து மழலைகள் பாடல்கள், கவிதை நிகழ்வு, நடனங்கள், நாடகங்கள், பட்டிமன்றம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது. இன்றைய விழாவில் கலைகளுடன் மாணவர்களின் மொழியாற்றல் அரங்கம் முழுவதையுமே தமிழ்மழையால் நனைத்ததுடன் அவையோரின் பெரு வரவேற்பையும் பெற்றிருந்தது.

ஏறத்தாழ மூன்று மணித்துளிகள் தொடர்ச்சியாக இடம்பெற்ற இந்த இனிய மாலைப்பொழுது, இறுதியில் பொங்கல் விழாவிற்குத் தேவையான அத்தனை ஒத்துழைப்புகள் வழங்கிய பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், நிர்வாகத்தினர் அனைவருக்கும் தமிழாலய ஆசிரியை செல்வி ஆர்த்தி பாஸ்கரன் அவர்களின் நன்றியுரையுடன் இனிதே நிறைவு பெற்றது.

ஆதவனைப் போற்றவே
ஆண்டு முதல் நாளிலே
பொங்கல் பொங்கிப் படைப்போம்
நம் உறவில் உலகை அளப்போம்
சுற்றம் சூழக் கூடி நாமுமே
பண்பாடி வாழ்த்தி நாளுமே
நன்றி சொல்லுவோமே
நாம் நன்றி சொல்லிவோமே.

தமிழால் தரணியில் இணைந்திடுவோம்

நன்றி,

நிர்வாகம்,

தமிழாலயம் பேர்லின்