கௌரவிப்பு நிகழ்வு 17. Oktober 2018

By / 29. March 2024 / Integration, School / No Comments
கௌரவிப்பு நிகழ்வு 17. Oktober 2018

பேர்லின் நகரில் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு நற்பணிகள் ஆற்றி அரச ரீதியில் வலுப்பெற்றிருக்கும் அமைப்பான ஜேர்மன் தமிழர் ஒன்றியத்தின் செயற்பாடுகளில் முதன்மை பெறும் தாய்மொழிக் கல்விப்பணியுடன், மேலதிக பிரிவுசார் செயற்பாடுகளில், பகுதி நேரங்களில் தமது ஒத்துழைப்புகளை நல்கி வரும் திறமையுள்ள ஆசிரியர்களையும், செயற்பாட்டாளர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு 17. Oktober 2018 புதன்கிழமை அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

கௌரவம் பெறுபவர்களிற்கு பேர்லின் நகராட்சிப் பேரவை முதல்வர் திரு. மிசல் முல்லர் (Michael Müller) அவர்களினால் கையொப்பமிடப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அத்துடன் இவரது கையொப்பத்திற்கு இணையாக ஜேர்மன் தமிழர் ஒன்றிய பொறுப்பாளரும், எமது தமிழாலய நிர்வாகியுமான திரு. பாலச்சந்திரன் பாலசுப்பிரமணியம் அவர்களின் கையொப்பமிடப்பட்டிருந்தமை மட்டுமல்லாமல், இச் சான்றிதழ்கள் மேலதிக கற்கை நெறிகளுக்கும், தொழில் வாய்ப்புகளிற்கும் பெரும்பயனுள்ளவையாக அமைந்துள்ளமையும் பெருமைக்குரிய விடயமாகும்.

மேலும் கடந்த நான்கு வருட காலங்களில் எமது சேவை நிறுவனம் பல செயற்திட்டங்களில் துரித வளர்ச்சி கண்டுள்ளது. என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே எதிர்வரும் காலங்களில் இவ்வாறான கடமைகளில் எண்ணிறைந்த ஆசிரியர்கள் இணைய வேண்டுமென கேட்டுக் கொள்வதோடு, இக் கௌரவிப்பில் கலந்து கொண்ட அனைத்து ஆசிரியர்களுக்கும், செயற்பாட்டாளர்களுக்கும்  எமது வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி

தமிழால் தரணியில் இணைந்திடுவோம்

நிர்வாகம்
ஜேர்மன் தமிழர் ஒன்றியம்